காஞ்சிபுரம்

மாமல்லபுரத்தில் கடல் கொந்தளிப்பு: மீன்பிடிப் படகு உடைந்தது

DIN


மாமல்லபுரத்தில் கடல் கொந்தளிப்பு அதிகரித்ததை அடுத்து செவ்வாய்க்கிழமை ராட்சத அலைகள் எழும்பின. இதனால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகு இரண்டாக உடைந்து உருக்குலைந்தது.
மாமல்லபுரத்தில் திங்கள்கிழமை இரவு முதல் கடல் கொந்தளிப்பு அதிகரித்துக் காணப்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு சந்திர கிரகணம் காரணமாக கடல் கொந்தளிப்பு மேலும் அதிகரித்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். கடல் கொந்தளிப்பு அதிகரித்ததால் ராட்சத அலைகள் ஆக்ரோஷத்துடன் கரையைக் கடந்து வந்து மோதியதில் மீனவர்கள் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த படகுகள் பாதிக்கப்பட்டன. ஒரு மீன்பிடிப் படகு இரண்டாக உடைந்து உருக்குலைந்தது. 
ராட்சத அலைகள் கடற்கரைப் பகுதியைத் தாண்டி வந்ததால் மணல் பரப்பில் தண்ணீர் புகுந்து தேங்கியது. ராட்சத அலைகள் கரையைத் தாண்டி வந்து தாக்கியதில் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றின் சிமெண்ட் தடுப்புகள் பெயர்ந்து சரிந்து விழுந்தன. அலைகள் தாக்குதலால் கடற்கரையோரம் உள்ள அந்த விடுதியின் மற்றொரு தடுப்புச் சுவரும் இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. கரைப் பகுதி வரை 10 மீட்டர் தூரத்திற்கும் மேல் ராட்சத அலைகள் வந்ததால் மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்த முடியாமல் தவித்தனர். 
கடல் சீற்றம் குறித்து மீனவர் பகுதியில் வசிக்கும் முன்னாள் கவுன்சிலர் சுரேந்தர் கூறியது:
தட்பவெப்ப மாற்றம் காரணமாக மாமல்லபுரத்தை ஒட்டியுள்ள கிழக்கு கடற்கரைச் சாலையையொட்டி உள்ள கடல் பகுதியில் கொந்தளிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில் கடல்கரையின் அழகை ரசிக்கவும் கடற்கரை மணலில் படுத்து ஓய்வு எடுக்கவும், சூரியக்குளியலில் ஈடுபடவும் வரும் வெளிநாட்டவர்கள் அவற்றில் ஈடுபட முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 
தமிழக அரசும், மீன்வளத் துறையும் மாமல்லபுரம் மீனவர் பகுதி கடற்கரை முழுவதும் தூண்டில் வளைவு அமைத்து கடல் அரிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் பல ஆண்டு கோரிக்கையான இதை நிறைவேற்றி அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT