முகப்பு
காஞ்சிபுரம்

நிகழாண்டில் அத்தி வரதர் பெருவிழா!

வரதராஜபெருமாள் கோயிலில் மிகச்சிறப்பாக போற்றப்படுவது அத்தி வரதர். இக்கோயிலின் திருக்குளத்தின் அடியில் வீற்றிருக்கும் அத்திவரதரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:58 AM
பகிர்:


வரதராஜபெருமாள் கோயிலில் மிகச்சிறப்பாக போற்றப்படுவது அத்தி வரதர். இக்கோயிலின் திருக்குளத்தின் அடியில் வீற்றிருக்கும் அத்திவரதரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். 
ஏனெனில் அவர் பக்தர்களின் கண்ணுக்கு புலப்படாது வீற்றிருப்பதோ அனந்தசரஸ் திருக்குளத்தின் அடியில். இக்கோயிலின் நூறுகால் மண்டபத்தின் வடக்கில் உள்ள அனந்தசரஸ் குளங்களில் நான்கு கால் மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் உள்ள மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு பக்தர்களின் எண்ணத்தோடு அருள்பாலித்து வருகிறார். இக்குளத்தில் நீர் எப்போதும் வற்றுவதில்லை. அதனால் பெருமாள் யாருடைய கண்ணுக்கும் புலப்படமாட்டார். 
பெருமாளின் திருமேனி மிகப்பெரிய அத்தி மரத்தால் வடிவமைக்கப்பட்டு, பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரம்மனின் யாகத் தீயிலிருந்து தோன்றியதால் பெரும் உஷ்ணத்தைத் தணிக்கவே தெப்பக்குளத்தில் வாசம் செய்வதாக ஐதீகம்.  
எனவே, அசரீரி மூலம் தன்னை அனந்தசரஸ் தீர்த்தத்தில் வைத்துவிட்டு பழைய சீவரத்திலிருந்து சிலையை காஞ்சியில் பிரதிஷ்டை செய்யுமாறு பணித்துள்ளார் பேரருளாளப் பெருமாள். 
பெருமாளை வெள்ளித்தகடு பதித்த பெட்டியில் சயன கோலத்தில் வைத்து அனந்தசரஸ் புஷ்கரணியில் நான்கு கால் மண்டபத்தின் நடுவே நீரில் வைத்துள்ளனர். பழைய சீவரப் பெருமாளை தேவராஜப் பெருமாள் என பிரதிஷ்டை செய்து விட்டனர். 
இந்த அனந்தசரஸ்  தீர்த்தம் என்றும் வற்றாததால் நீரை இறைத்து விட்டு ஆதி அத்தி வரதரை வெளியே கொண்டு வருவர். வெள்ளித் தகடுகள் பதித்த பெட்டியில் சயன கோலமாக அனந்தசரஸ் திருக்குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார். 
பேரருளாளன் அத்தி வரதரை வசந்த மண்டபத்தில் 48 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு வைப்பர். அதுபோல், நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் தரிசனம் தந்தபின், மீண்டும் அனந்தசரஸ் தீர்த்தத்தில் பெருமாள் சயனிக்கச் சென்று விடுவார். 
மிகவும் தொன்மையான இந்த அத்தி வரதரை 48 நாள்களுக்கு கண்குளிர தரிசனம் செய்யலாம். கடந்த 1937, 1979-ஆம் ஆண்டுகளில் இந்த பிரசித்தி பெற்ற வைபவம் நடைபெற்றது. அதன்பிறகு, நிகழாண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments