9.4.1976: அவசர நிலையை நீக்க ஏற்ற சூழ்நிலை இல்லை
அவசர நிலையை நீக்க ஏற்ற சூழ்நிலை இல்லை என மந்திரி தெரிவித்தது பற்றி...
புதுடில்லி, ஏப். 8 - நெருக்கடி நிலையை அகற்றுவதற்கு ஏற்ற சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை என்று உள்துறை துணை அமைச்சர் மோசின் கூறினார்.
பாகிஸ்தானில் ராணுவ பலம் பெருகி வருவது பற்றியும், இந்துமாக்கடல் பகுதியில் பதட்ட நிலையை உருவாக்க வல்லரசுகள் முயற்சி செய்து வருவது பற்றியும் வெளிவிவகார அமைச்சரும், பாதுகாப்பு அமைச்சரும் சுட்டிக் காட்டியிருப்பதை அவர் குறிப்பிட்டார்.
"நாட்டிற்குள்ளேயே அழிவு சக்திகள் இன்னமும் இருந்துவருகின்றன. ஆனால், அவை பதுங்கியிருக்கின்றன'' என்று அவர் சொன்னார்.
Advertisement
Advertisement
இந்திய பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தக் கோரும் தனியார் மசோதா மீது லோக்சபை விவாதத்தில் மோசின் குறுக்கிட்டுப் பேசினார். இடது கம்யூனிஸ்ட் அங்கத்தினர் சோமநாத் சட்டர்ஜி பால் கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவைப் பின்னர் நிராகரித்து விட்டது.
நடப்பு ஆண்டில் திட்டச் சார்பில்லா செலவுகளில் சிக்கனம்: தமிழக அரசு முடிவு
திருச்சி, ஏப். 8 - 1976-77-ம் வருடத்தில் கணிசமான அளவு பெரியதொரு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய அவசியத்தினையொட்டி, நடப்பு ஆண்டில் திட்டச் சார்பில்லா செலவுகளில் கடுமையான சிக்கனத்தைப் பேண தமிழ்நாடு அரசு' முடிவு செய்திருக்கிறது.
கீழ்க்கண்ட சிக்கன நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. மறு உத்தரவு வரையில் இந்த உத்தரவுகள் அமலில் இருக்கும்.
ஆறு மாதங்களாகவும், அதற்கு மேலாகவும் காலியாக உள்ள பதவி எதுவும் அரசாங்கத்திற்குத் தெரிவிக்காமல் பூர்த்தி செய்யப்படக்கூடாது. இத்தகைய பதவியைப் பூர்த்தி செய்ய நிதி இலாகாவின் திட்டவட்டமான இசைவினை, செக்ரடேரியட்டின் நிர்வாக இலாகாக்களும், இலாகா தலைமை அதிகாரிகளும் பெறுவது அவசியம்.
திட்டச் சார்பில்லா இனங்களில் புதிய பதவி எதையும் உருவாக்கக்கூடாது என்று தடை உள்ளது. இந்தத் தடை தொடர்ந்து நீடிக்கும். இது கடுமையாக அமல் செய்யப்படும். பிரதம காரியதரிசி, நிதிக் காரியதரிசி, சம்பந்தப்பட்ட நிர்வாக இலாகாவின் காரியதரிசி ஆகியோர் அடங்கிய குழு இந்தத் தடைக்கான விதிவிலக்குகளை அங்கீகரிக்க வேண்டும். ...