மதுராந்தகம் அடுத்த திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் உள்ள வராகப் பெருமாள் சந்நிதியில் திங்கள்கிழமை அணையா தீபம் ஏற்றப்பட்டது.
தென் திருப்பதி என அழைக்கப்படும் இக்கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆயூத பூஜை நாளான திங்கள்கிழமை அனைத்து சந்நிதிகளிலும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் உள்ள வராக பெருமாள் சன்னதியில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அணையா தீபம் ஏற்றப்பட்டது. இந்த அணையா தீபம் தொடர்ந்து அனைத்து நாட்களிலும் எரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த அணையா தீப அகண்டத்தில் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரப்படும் நெய்யை ஊற்றி, தமது வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வர். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, அகண்ட தீபத்தை வழிபட்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலூர் இந்து சமய அறநிலைய இணை ஆணையர் எஸ்.மாரிமுத்து, கோயில் செயல் அலுவலர் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.