பாண்டவ தூதப் பெருமாள் கோயிலில் பவித்ரோற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு உற்சவரான பாண்டவ தூதப்பெருமாள் வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கண்ணபிரான் பாண்டவர்களுக்கு தூது சென்றதால் பாண்டவ தூதப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இத்திருக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட பெருமைக்குரிய திவ்ய தேசங்களில் ஒன்றானதாகும்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பவித்ரோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா செவ்வாய்க்கிழமை அங்குரார்ப்பணத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினசரி பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், விசேஷ யாகபூஜைகளும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் பாண்டவதூதப் பெருமாள் வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பவித்ரோற்சவம் வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீருக்மணி தாயார் அறக்கட்டளை நிர்வாகிகள், பரம்பரை தர்மகர்த்தாக்கள் செய்து வருகின்றனர்.