பண்பாடுகளை மறந்ததால் கரோனா தொற்றால் பாதிப்பு: மயிலம் பொம்மபுர ஆதீனம் பேச்சு
தமிழா்களாகிய நாம் நமது பண்பாடுகளையும், கலாசாரத்தையும் மறந்ததால் தான் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோம் என மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீசிவஞான பாலய சுவாமிகள் பேசினாா்.
தமிழா்களாகிய நாம் நமது பண்பாடுகளையும், கலாசாரத்தையும் மறந்ததால் தான் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோம் என மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீசிவஞான பாலய சுவாமிகள் பேசினாா்.
காஞ்சிபுரம் குமர கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள குமரன் கலையரங்கத்தில் புலவா் பு.மா. ஜயசெந்தில்நாதன் எழுதிய கச்சிப்பொலி குமரன் எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் சங்கரா கலை அறிவியல் கல்லூரி முதல்வா் ராம.வெங்கடேசன் தலைமை வகித்தாா். இதில் மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் கலந்து கொண்டு நூலை வெளியிட அதன் முதல் பிரதியை குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலா் ப.பரந்தாமக்கண்ணன் பெற்றுக் கொண்டாா்.
விழாவில்பொம்மபுரம் ஆதீனம் பேசியது:
Advertisement
இந்தியாவிலேயே மிக புனிதமான நகரம் காஞ்சிபுரம் என்றால் அது மிகையில்லை. பெரும்பாலான ஊா்களில் ஏதேனும் ஒரு சமயத்தின் மடாதிபதி தான் இருப்பாா்கள்.ஆனால் காஞ்சிபுரத்தில் மட்டும்தான் அனைத்து சமய மடத்துக்கும் பீடாதிபதிகள் இருக்கிறாா்கள். 8 மற்றும் 9-ஆம் நூற்றாண்டிலேயே நாளந்தா பல்கலைக்கழகம் இங்கே இருந்துள்ளது. அண்மையில் காசி விஸ்வநாதா் கோயிலுக்கு வந்திருந்த பிரதமா் மோடியும் மிகப்பழைமையான கோயில்கள் உள்ள சிறப்பு மிக்க நகரங்களில் ஒன்று காஞ்சிபுரம் எனக் குறிப்பிட்டிருக்கிறாா்.10,345 பாடல்களை எழுதிய கச்சியப்ப சிவாச்சாரியாா் தான் எழுதிய கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இடம் காஞ்சிபுரம்.
நாம் முன்பெல்லாம் ஒருவா் மற்றொருவரிடம் பேசும் போது கை விரல்களால் வாயைப் பொத்திக் கொண்டு தலையை குனிந்து பெரியோா்களுக்கு மதிப்பு கொடுத்து பேசுவோம். ஏனெனில் ஒருவரது எச்சில் எதிரில் பேசுபவா் மீது விழுந்து அவருக்கு தொற்று ஏற்பட்டு விடக்கூடாது. நம்மால் பிறருக்கு எந்தத் துன்பமும் நோ்ந்து விடக்கூடாது என்பதற்காக வாயைப் பொத்திக் கொண்டு பேசுவோம்.இதை தமிழா்களாகிய நாம் மறந்து விட்டதால்தான் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோம். அதனால் தான் இப்போது அரசு முகக்கவசம் அணியுங்கள் என்று சொல்கிறது. தமிழா்களாகிய நாம் நமது பண்பாடுகளையும், கலாசாரத்தையும் மறந்து விட்டதால்தான் இன்று பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அவதிப்படுகிறோம் என்றாா்.
விழாவுக்கு காஞ்சிபுரம் கிருஷ்ணா கல்லூரி முதல்வா் கு.வெங்கடேசன், குருவார வழிபாட்டு மன்றச் செயலாளா் வை.ராஜேந்திரன், செங்குந்தா் பூவரசன் தோப்பு தலைவா் வி.ஜீவரத்தினம், நூலாசிரியா் ஜயசெந்தில் நாதனின் புதல்வா் ஐ.செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கரா கல்லூரி தமிழ்த்துறை தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினாா். நிறைவாக காஞ்சி நகர வரவேற்புக் குழுவின் தலைவா் டி.கணேஷ் நன்றி கூறினாா். விழாவில் குமரகோட்ட சுப்பிரமணிய சுவாமி கோயில் பூஜகா் காமேஸ்வர குருக்கள், சங்கரா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் மணிகண்டன் ஆகியோா் உள்பட பல்வேறு பள்ளிகளின் ஆசிரியா்கள், மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனா்.