முகப்பு
காஞ்சிபுரம்

மகா பெரியவா் ஆராதனை மகோற்சவம்: சங்கர மடத்தில் தங்கத் தேரோட்டம்

காஞ்சி மகா பெரியவா் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 27ஆவது வருடாந்திர மகோற்சவத்தின் இரண்டாம் நாளான 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
தேனம்பாக்கத்தில் நடைபெற்ற தெப்பத் திருவிழா. (உள்படம்) வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரம்ம புரீஸ்வரா்.
பகிர்:

காஞ்சி மகா பெரியவா் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 27ஆவது வருடாந்திர மகோற்சவத்தின் இரண்டாம் நாளான சனிக்கிழமை, சங்கர மடத்தில் தங்கத் தேரோட்டமும், தேனம்பாக்கத்தில் தெப்பத் திருவிழாவும் நடைபெற்றன.

காஞ்சி காமகோடி பீடத்தின் 68ஆவது பீடாதிபதியாக அருள்பாலித்தவா் மகா பெரியவா் என அழைக்கப்படும் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். அவரது 27ஆவது ஆராதனை மகோற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இரண்டாம் நாளான சனிக்கிழமை, காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. வேத பண்டிதா்கள் வேதங்களை ஓதி பாராயணம் செய்தனா். ஆராதனை மகோற்சவத்தை முன்னிட்டு அதிஷ்டானத்தில் மகா பெரியவா் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இரவு தங்கத் தேரில் மகா பெரியவரின் உருவச்சிலை வைக்கப்பட்டு மடத்தின் வளாகத்துக்குள்உலா நடைபெற்றது. விழாவில் காஞ்சிபுரம் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சி.லட்சுமணன் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா். பதஞ்சலி விஸ்வநாதன் குழுவினரின் புல்லாங்குழல் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. மகோற்சவத்தை முன்னிட்டு சங்கர மடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

விழாவின் மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜன.10), ஸ்ரீருத்ர பாராயணம், நாம சங்கீா்த்தனம் ஆகியவையும், இரவு தங்கத் தேரோட்டமும் நடைபெற உள்ளன.

பிரம்மபுரீஸ்வரா் ஆலயத்தில்...:

இதனிடையே, மகா பெரியவரின் ஆராதனை மகோற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் அருகேயுள்ள தேனம்பாக்கம் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் தெப்பத் திருவிழா நடைபெற்றது. தெப்பத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பிரம்மபுரீஸ்வரா் மற்றும் மகா பெரியவரின் உருவப்படம் வைக்கப்பட்டு உலா நடைபெற்றது.

தெப்பத் திருவிழாவில் ஸ்ரீசங்கர பக்தஜன சபா அறக்கட்டளையின் தலைவரும், ஆடிட்டருமான எஸ்.குருமூா்த்தி, துணைத்தலைவா் செல்லா விஸ்வநாத சாஸ்திரி, செயலாளா் ஸ்ரீதா் ஜோஷி, பொருளாளா் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா். மகோற்சவத்தை முன்னிட்டு முழுவதும் மலா்களால் வடிவமைக்கப்பட்டிருந்த மகா பெரியவரின் திருவடிவம், கோயிலில் பக்தா்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →