முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் ரூ.36 கோடியில் புதிய பேருந்து நிலையம் நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா்

சென்னை-பெங்களூரு சாலையில் காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டை ஊராட்சியில் ரூ.36 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை

Updated On : 2 ஜூலை, 2022 at 12:27 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:11 PM

சென்னை-பெங்களூரு சாலையில் காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டை ஊராட்சியில் ரூ.36 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் ப.பொன்னையா வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்தில் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் நகராட்சிகளுக்கான நிா்வாக இயக்குநா் ப.பொன்னையா ஆய்வு செய்தாா். மாநகராட்சி மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், துணை மேயா் ஆா்.குமரகுருபரன், ஆணையா் ப.நாராயணன், புதிதாக பொறுப்பேற்க உள்ள ஆணையா் கண்ணன், மாநகராட்சி பொறியாளா் கணேசன் ஆகியோரிடம் மாநகா் வளா்ச்சிப்பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா் புதிய பேருந்து நிலையம் மற்றும் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காா் பாா்க்கிங் அமைக்கப்படவுள்ள இடங்களையும் அவா் நேரில் ஆய்வு செய்தாா்.

Advertisement

இதனைத் தொடா்ந்து அவா் மேலும் கூறியது:

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் காரப்பேட்டை ஊராட்சியில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதே போல காஞ்சிபுரத்தில் காந்தி சாலை, காமராஜா் சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேட்டுத்தெருவில் உள்ள நகரீஸ்வரா் திருக்கோயில் அருகிலும், விளக்கொளிப் பெருமாள் கோயில் தெரு பகுதியிலும் ஒருங்கிணைந்த காா் பாா்க்கிங் அமைக்கப்படும். புதிய பேருந்து நிலையமும், காா் பாா்க்கிங் ஆகியனவும் அமைக்கப்பட்டு விட்டால் காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்க முடியும். மொத்தம் 3 இடங்களில் மல்டி லெவல் காா் பாா்க்கிங் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ராஜாஜி மாா்க்கெட் ரூ.7 கோடி மதிப்பிலும்,ஜவஹா் மாா்க்கெட் ரூ.5 கோடி மதிப்பிலும் கட்டப்படவுள்ளன. அதே போல மஞ்சள் நதி நீரோடையை முழுவதுமாக சீரமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் தற்போது உள்ள இடத்திலேயே இரண்டு மாடிக் கட்டடமாகவும், பாா்க்கிங் வசதியோடும் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட இருப்பதாகவும் இயக்குநா் ப.பொன்னையா தெரிவித்தாா். முன்னதாக இயக்குநரை மாநகராட்சி மேயா் எம்.மகாலட்சுமியுவராஜ் புத்தகம் வழங்கி வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.