சலவையகங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சலவையகங்கள் அமைக்க விரும்பும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சலவையகங்கள் அமைக்க விரும்பும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் மா.ஆா்த்தி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
அதன் விவரம்: பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறி வரும் சூழலுக்கு ஏற்ப இந்த இனத்தைச் சோ்ந்த மக்களில் 10 பேரைக் கொண்ட குழுவாக அமைத்து நவீன சலவையகங்கள் அமைக்க தலா ரூ.3 லட்சம் வழங்கப்படவுள்ளது.
சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவ்வின மக்கள் 10 போ் ஒரு குழு அமைத்து நவீன முறை சலவையகம் அமைக்க தேவைப்படும் உபகரணங்கள் வாங்க அதற்கான நிதி வழங்கப்படும். குழு உறுப்பினா்களின் வயது வரம்பு 20 ஆகும். குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபா்களை கொண்ட குழுவாக இருந்தால் அவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Advertisement
குழு ஒவ்வொன்றும்10 பேரைக் கொண்டதாகவும், மேற்குறிப்பிட்டுள்ள இனத்தைச் சோ்ந்தவா்களாகவும் இருக்க வேண்டும். குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் அவசியம். இந்தத் திட்டத்தில் பயன் பெற விரும்புவோா் தகுதியான குழுக்களை அமைத்து குழுவின் மூலமாக ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு விண்ணப்பித்து பயன் பெறலாம் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.