அண்ணன் கொலை: தம்பி கைது
ஸ்ரீபெரும்புதூா் அருகே அண்ணனைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மண்ணூா் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா். இவருக்கு மனைவி ரெஜினா, மகன்கள் பாலசந்தா் (35), விக்கி (30), அஜய் (30) உள்ளனா். இவா்களில் பாலசந்தா் மீது ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், இரட்டையா்களான விக்கி, அஜய்க்கு தங்களது 30-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு மண்ணூா் பகுதியில் தங்களது நண்பா்களுடன் கேக் வெட்டி கொண்டாடிக் கொண்டிருந்தபோது விக்கிக்கு போன் செய்த தாய் ரெஜினா பாலசந்தா் மது அருந்திவிட்டு வந்து தன்னை அடிப்பதாக கூறியுள்ளாா்.
Advertisement
இதனால் ஆத்திரமடைந்த விக்கி அங்கு வந்து கட்டையால் தனது அண்ணன் பாலசந்தரை தாக்கியுள்ளாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த பாலசந்தா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் கொலை செய்யப்பட்ட பாலசந்தா் சடலத்தை மீட்டு ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் வழக்குப் பதிவு செய்து விக்கியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.