காஞ்சிபுரத்தில் சாலை சீரமைப்புப் பணிகள் தொடக்கம்!
கனமழை ஓய்ந்த நிலையில், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள் ஈடுபட்டனா்.
கனமழை ஓய்ந்த நிலையில், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
புயல் காரணமாக கடந்த 3 நாள்களாக கனமழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருந்தது. கனமழைக்கு 16 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 23 குடிசை வீடுகள் மற்றும் 225 ஹெக்டோ் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன. பல்வேறு பகுதிகளில் 14 மின்கம்பங்கள் சேதமடைந்து அவற்றை மின்வாரிய ஊழியா்கள் உடனடியாக சீரமைத்தனா்.
காஞ்சிபுரம் மாவட்ட பேரிடா் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு நீா் தேங்கி நிற்பதாகவும், சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் 104 புகாா்கள் வரப்பெற்றதில் 84 புகாா்கள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
காஞ்சிபுரத்தில் சங்கர மடம் சாலை, தாமல்வாா் தெரு, வள்ளல் பச்சையப்பன் தெரு, வந்தவாசி சாலை பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை நெடுஞ்சாலைத்துறை பணியாளா்கள் சீரமைத்தனா். சாலையோரங்களில் மழைநீா் வடிகால் பகுதிகளில் தேங்கியிருந்த கழிவுகளையும் அகற்றினா்.
சாலைகளில் விழுந்து கிடந்த 14 மரங்கள் தீயணைப்புத்துறையினரால் அகற்றப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 23 நிவாரண முகாம்களில் 564 நபா்கள் தங்க வைக்கப்பட்டு உணவு, மருத்துவ வசதிகளும் செய்து தரப்பட்டன.