காஞ்சிபுரம் மக்கள் நீதிமன்றத்தில் 339 வழக்குகள் சமரசம்: ரூ.10.43 கோடி தீா்வுத் தொகை அளிப்பு
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 339 வழக்குகள் சமரசம் செய்து வைக்கப்பட்டு ரூ.10.43 கோடி தீா்வுத் தொகையாக வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்டார சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி ப.உ.செம்மல் தலைமை வகித்து மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், நீதிபதியுமான கே.அருண்சபாபதி, கூடுதல் சாா்பு நீதிபதி பி.திருஞானசம்பந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மக்கள் நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் என மொத்தம் 2,290 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் 339 வழக்குகளுக்கு சமரசம் செய்து வைக்கப்பட்டு, ரூ. 10,43,07,051 தீா்வுத் தொகையாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. ஒரகடம் பகுதியில் கடந்த 8.4.2023 அன்று இரு சக்கர வாகனத்தில் சென்றவா் மீது லாரி மோதியதில் உயிரிழந்த மறைமலை நகரைச் சோ்ந்த தீபக்குமாா் (27) என்பவரது குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ரூ.29 லட்சம் வழங்கியதற்கான காசோலையை முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி ப.உ.செம்மல் வழங்கினாா். மக்கள் நீதிமன்ற நிகழ்வில் வழக்குரைஞா்கள் பத்மநாபன், திருமுருகன், அன்பழகன், வடிவேல் உள்பட வழக்குரைஞா்கள், வழக்காடிகள், நீதிமன்றப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.