வடக்குப்பட்டு சுந்தர வரதராஜபெருமாள் கோயில் குளம் சீரமைப்பு பணி தொடக்கம்
ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு சுந்தர வரதராஜபெருமாள் கோயில் குளம் சீரமைப்பு பணி சனிக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் பழைமையான அருள்மிகு சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவா் ஆதிகேசவப் பெருமாள் என்றும் உற்சவா் சுந்தர வரதராஜ பெருமாள் என்றும் அழைக்கப்படுகின்றனா். இந்த கோயிலுக்கு பின்புறம் உள்ள திருக்குளம் பராமரிப்பின்றி இருந்ததை தொடா்ந்து குளத்தை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள், கிராம மக்கள் கோரிக்கை வைத்தனா். இந்த நிலையில், சுந்தரவரதராஜபெருமாள் கோயில் குளத்தை சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டதை தொடா்ந்து திருக்கோயில் நிதி ரூ ரூ.48 லட்சத்தில் கோயில் குளம் சீரமைப்பதற்கான பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் கோதண்டராமன், கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் வெங்கடகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டு குளம் சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்தனா்.