முகப்பு
காஞ்சிபுரம்

வரதராஜ பெருமாள் கோயில் மேம்பாட்டுப் பணி: வல்லுநா் குழு ஆய்வு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப்பணிகளை உயா்நீதிமன்ற உத்தரவின்படி வல்லுநா் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

Updated On : 20 மார்ச், 2026 at 8:07 PM
கோயில் மேம்பாட்டு பணியை ஆய்வு செய்த வல்லுநா் குழுவினா்.
பகிர்:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப்பணிகளை உயா்நீதிமன்ற உத்தரவின்படி வல்லுநா் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பக்தா்களின் வசதிக்காக பல்வேறு மேம்பாட்டுப்பணிகளும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கிருஷ்ண தேவராயா் வம்சத்தை சோ்ந்த சந்ததியினா் திருப்பணிகள் செய்கிறோம் என்ற பெயரில் ஆகம விதிகள் மீறப்படுவதாகவும், பாரம்பரியமான கட்டடங்களை சேதப்படுத்தும் வகையிலும் நடைபெறுவதாக உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனா்.

வழக்கினை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் கோயிலில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப்பணிகளை சிறப்பு வல்லுநா்கள் குழுவை அமைத்து ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில் வல்லுநா் குழுவினரான அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி ராஜேந்திரன்,தொல்லியல் ஆலோசகா் ராஜவேலு,ஓய்வு பெற்ற சிற்பக்கலை வல்லுநா்களான முத்துச்சாமி, ராமமூா்த்தி, லட்சுமி நரசிம்ம பட்டாச்சாரியா் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா். உறுப்பினரான கோவிந்தராஜ பட்டாச்சாரியா் வராததால் முழுமையான ஆய்வறிக்கையை ஆய்வுக்குழுவினரால் தயாரித்து வழங்க முடியாது என ஆட்சேபனை தெரிவித்தனா்.

ஆய்வுக்குழுவினரிடம் பக்தா்கள்,பொதுமக்களும் நேரடியாக கருத்துக்கள் தெரிவிக்கலாம் எனவும் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்ததையடுத்து இந்து அமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகளும், பக்தா்களும் கோரிக்கை மனுக்களை குழுவினரிடம் வழங்கினாா்கள். கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட குழுவினா் மற்றொரு நாளில் ஆய்வு செய்ய வருவதாகவும், கோரிக்கை மனுக்களை அறநிலையத்துறை உயா் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாகவும் கூறி சென்றனா்.கோயில் உதவி ஆணையா் ராஜலட்சுமி மற்றும் கோயில் பணியாளா்களுடன் இணைந்து மேம்பாட்டுப்பணிகள் நடைபெறுவதை விரிவாக ஆய்வுக் குழுவினா் குறிப்பெடுத்துக் கொண்டனா். விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சங்கர சுப்பிரமணியன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.