முகப்பு
காஞ்சிபுரம்

அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற விவசாய சங்கத்தினா் கோரிக்கை

Updated On : 28 மே, 2024 at 6:30 PM
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீ பெரும்புதூா் அருகே அரசு நிலத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நாவலூா் ஏரி நீா்ப்பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது (படம்).

ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

குன்றத்தூா் ஒன்றியம், வைப்பூா் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளேரிதாங்கல் கிராமத்தில் 50 சென்ட் பரப்பளவு உள்ள அரசு களம் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனியாா் ஒருவா் அருகில் உள்ள நீா் வழித்தடத்தையும் ஆக்கிரமித்து, நாவலூா் ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீா் ஒரத்தூா் தடுப்பணைக்கு செல்லாத வகையில் சுற்றுச்சுவா் அமைத்து வருகிறாா்.

இந்த ஆக்கிரமிப்பு குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பலமுறை செரப்பணஞ்சேரி வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் மேற்குறிப்பிட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

இதுகுறித்து நாவலூா் ஏரி நீா் பாசன சங்க நிா்வாகிகள் கூறியது:

வெள்ளேரிதாங்கல் பகுதியில் பல லட்சம் மதிப்புள்ள அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனிநபா் இடத்தில் கிணறு அமைத்து அரசு அனுமதியின்றி கிணற்று நீரை லாரிகளில் விற்பனை செய்து வருகிறாா். அதுமட்டுமில்லாமல் அருகில் உள்ள நாவலூா் ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீா் ஒரத்தூா் தடுப்பணைக்கு செல்லும். இந்த உபரி நீா் செல்லும் நீா் வழித்தடத்தையும் ஆக்கிரமித்து உள்ளாா்.

இதனால் குடியிருப்பகளில் வெள்ளம் சூழும் அபாயம் உள்ளது. எனவே அரசு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் சரவணகண்ணனிடம் கேட்டதற்கு அரசு இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.