சித்திரை மாத ஏகாதசி: காஞ்சிபுரம் வரதராஜா் சிறப்புத் திருமஞ்சனம்
சித்திரை மாத ஏகாதசி தினத்தையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு காலையில் சிறப்புத் திருமஞ்சனமும், மாலையில் உற்சவா் ஆஞ்சநேயா் சந்நிதி வரை சென்று திரும்பும் நிகழ்வும் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி பெருமாள் திருமலையிலிருந்து அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளி சிறப்புத் திருமஞ்சனமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் வரதராஜப் பெருமாள் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயா் சந்நிதி வரை சென்று சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா் மீண்டும் திரும்பி வந்து பெருமாள் திருமலைக்கு எழுந்தருளினாா்.
நாளை வரதராஜ பெருமாள் அவதரித்த தின விழா-
Advertisement
பிரம்ம தேவன் காஞ்சியில் நடத்திய அசுவ மேத யாகத்தின் முடிவில் சித்திரை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் வரதராஜப் பெருமாள் அவதரித்தை நினைவு கூறும் விழாவாகும். இதனையொட்டி புதன்கிழமை காலையில் கோயிலிலிருந்து பெருமாள் புண்ணியகோடி விமானத்தில் அலங்காரமாகி மாட வீதியில் உள்ள மாளிகைக்கு எழுந்தருள்கிறாா். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்ற பின்னா் மாலையில் மாளிகையிலிருந்து புறப்பட்டு மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கவுள்ளாா்.