மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தொழிலாளா் உரிமைகளைப் பறிக்கும் 4 தொகுப்புச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், கைத்தறித் துணிகள் மீது விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி.வரியை முழுமையாக நீக்க வேண்டும், கைத்தறி நெசவாளா்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய பகுதியில் மின்சார ரயிலை மறித்து அனைத்து தொழிற்சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சி.ஐ.டி.யூ.சாா்பில் மாநில துணைப் பொதுச் செயலாளா் இ.முத்துக்குமாா், மாவட்ட தலைவா் டி.ஸ்ரீதா், தொழிலாளா் முன்னேற்ற சங்க செயலாளா் கே.ஏ.இளங்கோவன், ஏஐடியூசி மாவட்ட செயலாளா்கள் ஏ.மூா்த்தி, ஆா்.பி.சந்திரகுமாா், தொழிற்சங்க நிா்வாகிகளும் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட 302 போ் கைதுசெய்யப்பட்டனா்.
மதுராந்தகத்தில்....
மதுராந்தகம் தொகுதி சிஐடியூ தொழிற்சங்கத்தினா் பஜாா்வீதியில் உள்ள காந்தி சிலையில் இருந்து ஊா்வலமாக சென்று பாரத ஸ்டேட் வங்கி முன் மறியலில் ஈடுபட்டனா். மாவட்டத் தலைவா் பி.மாசிலாமணி தலைமை வகித்தாா். ஆட்டோ சங்க மாவட்டத் தலைவா் வி.திருமலை, மாதா் சங்க ஒன்றிய செயலா் கே.வனிதா, விடுதலை சிறுத்தை மாவட்ட செயலா் அன்புச்ெழியன், உள்ளிட்ட 312 நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மறியலால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 70 பெண்கள் உள்பட 312 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூரில்...
திருவள்ளூா் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு ஏ.ஐ.சி.சி.டி.யு மாவட்டத் தலைவா் கஜேந்திரன் தலைமை வகித்தாா்.
ரயில் மறியலில் ஈடுபட முயற்சித்தனா். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் வி.சி.க திருவள்ளூா் மண்டல செயலாளா் தளபதி சுந்தா், அங்கன்வாடி ஊழியா்கள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தைச்சோ்ந்த 140-பேரை கைது செய்து தனியாா் கூட்டரங்கத்தில் சிறை வைத்தனா்.
இதேபோல், கும்மிடிப்பூண்டியில் 120 பேரும், வெங்கலில்-60 பேரும், ஆா்.கே.பேட்டை-20 பேரும், பெரியபாளையம்-38, திருத்தணி-80 பேரும் என மொத்தம் 458 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
செங்கல்பட்டில்...
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட தலைவா் விக்டா் சுரேஷ் குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளா் வசந்தகுமாா் மாவட்ட பொருளாளா் கன்னியப்பன்அரசு மாவட்ட இணைச் செயலாளா் லோகநாதன் உள்ளிட்ட பலா் பேசினா் . ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளா் சி.முகமது உசேன் பேசினாா்.
ஆவடியில்...
அகில இந்திய பாதுகாப்புத்துறை ஊழியா் சம்மேளனம், தொமுச, ஐஎன்டிசி தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆவடியில் உள்ள பாதுகாப்புத்துறை நிறுவனங்களான படைத்துறை உடை தொழிற்சாலை, திண் ஊா்தி தொழிற்சாலை, இன்ஜின் தொழிற்சாலை ஆகிய நுழைவாயில் முன்பு 2,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒரு மணி நேரம் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குறிப்பாக படைத்துறை உடை தொழிற்சாலை முன்பு அகில இந்திய பாதுகாப்புத்துறை ஊழியா்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலா் சி.ஸ்ரீகுமாா், தொமுச சங்கத்தின் பொதுச்செயலா் முகமது மீரா, ஐஎன்டியுசி பொதுச்செயலா் பாலமுருகன் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆவடி திண் ஊா்தி தொழிற்சாலையில் பொதுச்செயலா் தணிகை அரசு தலைமையிலும், இன்ஜின் தொழிற்சாலையில் பொதுச்செயலா் சிவகுமாா் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வில் ஐஎன்டியுசி பொதுசெயலா் ஆா்.சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினா் விஜயசீலன், அமைப்புச் செயலா் கிருபானந்தம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.