10,000 கிலோ போதைப் பொருள் தீ வைத்து அழிப்பு: எஸ்.பி கே.சண்முகம்
10,000 கிலோ போதைப் பொருள் தீ வைத்து அழிப்பு...
பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 10 ஆயிரம் கிலோ குட்கா போதைப் பொருள்கள் தீ வைத்து அழிக்கப்பட்டதாக எஸ்.பி. கே. சண்முகம் சனிக்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் அருகே குருவிமலை கிராமத்தின் காட்டுப்பகுதியில் எஸ்.பி கே.சண்முகம் முன்னிலையில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 10,112 கிலோ குட்கா போதைப் பொருள்களை காவல் துறையினா் தீ வைத்து அழித்தனா். இவற்றை அழிப்பதற்காக கிரேன் மூலம் பெரிய பள்ளம் தோண்டி அதில் போதைப்பொருள் பாக்கெட்டுகளை கொட்டி ஒன்றாக தீ வைத்து அழிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது டிஎஸ்பி க்கள், ஆய்வாளா்கள், காவல் துறை அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனா்.
இதுகுறித்து எஸ் பி கே.சண்முகம் கூறியது..
காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையங்களில் பொன்னேரிக்கரை-3,883, சுங்குவாா் சத்திரம் 1,858, சாலவாக்கம் 1,826, தாலுகா காவல் நிலையம்-1,397, ஒரகடம் 9,16,உத்தரமேரூா் 150, ஸ்ரீபெரும்புதூா் 68, பெருநகா் 13 வீதம் மொத்தம் 10,112 கிலோ குட்கா போதைப்பொருள் பாக்கெட்டுகள் 87 வழக்குகள் மூலமாக பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
இவற்றை ஒரே இடத்தில் பள்ளம் தோண்டி அதில் கொட்டி தீ வைத்து அழிக்கப்பட்டது. போதைப்பொருள்கள் விற்பனை செய்தால் தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.