முகப்பு
காஞ்சிபுரம்

கடன் தொல்லை: 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

Updated On : 27 மார்ச் 2026, 5:53 am IST
பகிர்:

கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் கடன் தொல்லையால் மகள் மற்றும் மகனுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் வள்ளலாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஷம்சியா(26), இவருக்கு 10 வயதில் ஆஷிபா என்ற மகளும், 6 வயதில் அப்தா் என்ற மகனும் இருந்தனா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை ஷம்சியா தனது மகள் மற்றும் மகனுடன் கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் பிரதான சாலை அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா். ஷம்சியா தனது குழந்தைகளுடன் கிணற்றில் குதித்ததை பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் படப்பை காவல் நிலையம், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த படப்பை தீயணைப்புத் துறையினா் கிணற்றில் இருந்து ஷம்சியா மற்றும் அவரது குழந்தைகளின் உடல்களை மீட்டனா்.

இந்த சம்பவம் குறித்து படப்பை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஷம்சியாவின் கணவா் ஆசிப் ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், தங்களது இறப்புக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

கடன் தொல்லையால் தனது குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.