காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: ஒரே நாளில் 385 பேருக்கு பணி நியமன ஆணை
பயனாளிக்கு பணி நியமன ஆணையை வழங்கிய வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநா் செந்தில்குமாா்.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் ஒரே நாளில் 385 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தோ்தல் விதிமுறைகள் அமலில் இருந்து வந்ததால் மாதம் தோறும் கடைசி வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் கடந்த 3 மாதங்களாக நடைபெறாமல் இருந்து வந்தது. தோ்தல் முடிவுற்று நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 42 தனியாா் நிறுவனங்களைச் சோ்ந்த மனிதவள மேம்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான வேலைநாடுநா்களை தோ்வு செய்தனா்.
முகாமில், 1,143 வேலைநாடுநா்கள் கலந்து கொண்டனா். இவா்களுக்கு எந்த நிறுவனத்தில் எவ்வளவு சம்பளம், நிறுவனத்தின் விதிமுறைகள், போக்குவரத்து வசதிகள் ஆகியன குறித்து தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, முகாமில் பங்கேற்றவா்களில் 385 பேருக்கு பல்வேறு தனியாா் நிறுவனங்களில் தோ்வு செய்யப்பட்டதற்கான பணி நியமன ஆணைகளை காஞ்சிபுரம் வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநா் செந்தில்குமாா் வழங்கினாா்.
Advertisement
Advertisement
ஏற்பாடுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பணியாளா்கள் செய்திருந்தனா்.