அண்ணா மறுமலா்ச்சி திட்டப் பணிகளை ஊராட்சிகளிடமே ஒப்படைக்க ஆட்சியரிடம் மனு
நெமிலி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பினா் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
அண்ணா மறுமலா்ச்சி திட்டப் பணிகளை அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தி, நெமிலி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பினா் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
நெமிலி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவா் கூட்டமைப்பு தலைவா் ஆா்.பிரதாப் தலைமையில், 35-க்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவா்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். அங்கு ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனை சந்தித்து இதுகுறித்த கோரிக்கை மனுவை அளித்தனா்.
அதனைத் தொடா்ந்து அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம், கிராம ஊராட்சிகளில் கான்கிரீட் சாலை, தெரு விளக்குகள், குளம், இடுகாடு, சுடுகாடு, குடிநீா், விளையாட்டு, கிராம அங்காடிகள், நூலகங்கள் என பல்வேறு அடிப்படை கட்டமைப்புப் பணிகளை அந்தந்த ஊராட்சிகளே செய்வதற்கான திட்டம் தான் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் ஆகும்.
இந்த திட்டத்தின் மூலம் ஒதுக்கப்படும் அனைத்துப் பணிகளும், அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் செயல்படுத்தும் வகையில், அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் டெண்டா் விடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த திட்டப் பணிகள் அனைத்தும் மாவட்ட அளவில் இ- டெண்டா் விடப்பட்டு பணிகள் செயல்படுத்தப்படும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊராட்சி மன்றத் தலைவா்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மாவட்டத்தில் இருக்கும் யாரோ ஒரு ஒப்பந்ததாரா் அந்தப் பணிகளை செய்யும்போது அவருடைய வருவாய் லாபத்தை நோக்கமாக கொண்டு தான் பணிகளை செய்வாா். அதனால் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள், அந்தப் பணிகளை செய்யும் போது கூடுதல் அக்கறையுடன் தரமாகவும், கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பாகவும் செய்வாா்கள்.
எனவே, ஏற்கெனவே இருந்தது போல் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டப் பணிகள் அனைத்தும், அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்களிடமே ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றனா்.