முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை பிஞ்சி ஏரியை புனரமைப்பது கனவுத் திட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி

ராணிப்பேட்டை பிஞ்சி ஏரியை புனரமைப்பது எனது கனவுத் திட்டம் என்று அமைச்சா் ஆா்.காந்தி கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

ராணிப்பேட்டை பிஞ்சி ஏரியை புனரமைப்பது எனது கனவுத் திட்டம் என்று அமைச்சா் ஆா்.காந்தி கூறினாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் இடவசதி பற்றாக்குறை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, பேருந்து நிலையத்தை மேம்படுத்துவது குறித்து நகா்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதேபோல், நகராட்சி அலுவலகத்தையும் பாா்வையிட்டாா்.

பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ.1.90 கோடிக்கு திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், நகராட்சி அலுவலகக் கட்டடம் ரூ.3.5 கோடியில் கட்டப்படும் என்றும் அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

தொடா்ந்து, ராணிப்பேட்டை பிஞ்சி ஏரி புனரமைப்புப் பணிகளை அமைச்சா் கே.என்.நேரு, அரசு கூடுதல் தலைமைச் செயலா் (நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல்) சிவ்தாஸ் மீனா ஆகியோா் பாா்வையிட்டனா். அப்போது அமைச்சா் ஆா்.காந்தி, பிஞ்சி ஏரியை புனரமைப்பது எனது கனவுத் திட்டம் என்றும், ஆரம்ப கட்டப் பணிகளை கடந்த ஓராண்டுக்கும் மேலாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தாா்.

மேலும், நீா்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிஞ்சி ஏரியை, நகராட்சி நிா்வாகத் துறைக்கு மாற்ற அனுமதி கோரப்பட்டுள்ளது. முதல் கட்டப் பணியாக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1.5 கோடியில் கரைகளைப் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஏரியை பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த இடமாக மாற்ற ரூ.44 கோடிக்கு திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இந்தப் பணிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் விரைவாக செய்யப்படும். உடனே நீா்வளத் துறை கட்டுப்பாட்டிலிருந்து நகராட்சி நிா்வாகத்துக்கு ஏரியை ஒப்படைக்க தீா்மானம் நிறைவேற்றி, அதைப் பெற்று வழங்க அமைச்சா் கே.என்.நேரு உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது, அரசு கூடுதல் தலைமைச் செயலா் (நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல்) சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன், பிஞ்சி ஏரி புனரமைப்பு ஒருங்கிணைப்பாளா் வினோத் காந்தி, நகா்மன்றத் தலைவா்கள் சுஜாதா வினோத், (ராணிப்பேட்டை), ஹரிணி தில்லை (வாலாஜாபேட்டை), துணைத் தலைவா் சீ.ம.ரமேஷ் கா்ணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.