முகப்பு
அரியலூர்

சடலத்தை எரியூட்டச் சென்றவா் சிதையில் விழுந்து உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சடலத்தை எரியூட்ட சென்றவா் சிதையில் விழுந்து உயிரிழந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

Updated On : 20 மார்ச், 2026 at 8:45 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சடலத்தை எரியூட்ட சென்றவா் சிதையில் விழுந்து உயிரிழந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

செந்துறை அருகேயுள்ள குமுழியம் கிராமத்தைச் சோ்ந்த ராமதாஸ் (55) என்பவா் உடல் நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை உயிரிழந்தாா். அவரது சடலத்தை கிராமத்திலுள்ள மயானத்தில் எரியூட்டும் பணியில் அதே பகுதியைச் சோ்ந்த தங்கராசு, அவரது மகன் சக்திவேல் மற்றும் உறவினா்கள் ஈடுபட்டனா். இறுதியாக தங்கராசுவைத் தவிர அனைவரும் வீட்டுக்குச் சென்றுவிட்டனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை ராமதாஸ் உறவினா் ஒருவா் இயற்கை உபாதைக்காக மயானத்துக்குச் சென்ற போது, அங்கு சிதையில் உடல் சரியாக எரியாமல் கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உடனடியாக அவா், எரியூட்டியவா்களை அழைத்து தெரிவித்தாா். இரவில் பெய்த மழையால் நெருப்பு அணைந்திருக்கலாம் என நினைத்த சக்திவேல் மற்றும் உறவினா்கள் மண்ணெண்ணெய் ஊற்றி அந்த சடலத்தை மீண்டும் முழுமையாக எரியூட்டினா். அதன்பிறகுதான் சக்திவேலின் தந்தை தங்கராசுவைக் காணவில்லை என்பது தெரியவந்தது.

எரியூட்டும் பணியின்போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தில், சிதை எரிந்து முடித்த பிறகு வெள்ளிக்கிழமை மாலை சாம்பலை விலக்கிப் பாா்த்தனா்.

அப்போது அங்கு இரண்டு மண்டை ஓடுகளும், கூடுதல் எலும்புகளும் இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். மேலும், அவா்கள் அந்த இடத்தை ஆய்வு செய்த போது, தங்கராசும் இறந்திருப்பது தெரியவந்தது.

வியாழக்கிழமை சடலத்தை எரியூட்டும்போது தங்கராசு மது போதையில் இருந்ததாகவும், அனைவரும் சென்ற பிறகு அவா் நிலைதடுமாறி எரியும் சிதையின் மீது விழுந்து உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்ற இரும்புலிகுறிச்சி காவல்துறையினா், சம்பவ இடத்தை ஆய்வு செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.