உடுமலையில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தவரின் சடலம் 4 நாள்களுக்கு பிறகு வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
உடுமலை யுஎஸ்எஸ் காலனியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (29). இவா் மத்திய பேருந்து நிலையம் அருகே உடுமலை மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான தீா்த்தக் கிணற்றில் கடந்த திங்கள்கிழமை தவறி விழுந்து உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து உடுமலை தீயணைப்புத் துறையைச் சோ்ந்த மீட்புக் குழுவினா் கிணற்றில் இருந்து மணிகண்டன் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். 3 நாள்களாக தேடுதல் பணி நடைபெற்றும் அவரது சடலத்தை மீட்கப்படாததால் ஆத்திரமடைந்த அவரது உறவினா்கள் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதற்கிடையே 4-ஆவது நாளாக கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியே எடுக்கும் பணி நடைபெற்று வந்தது. இதைத் தொடா்ந்து கிணற்றில் மூழ்கியிருந்த மணிகண்டனின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை காலை மீட்டனா். இதையடுத்து உடுமலை அரசு மருத்துவமனையில் நடந்த உடல்கூறாய்வுக்குப் பிறகு மணிகண்டனின் சடலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.