அஞ்சலக முத்திரையை தவறாக பயன்படுத்தியவா்கள் மீது வழக்கு
ஆற்காட்டில் அஞ்சலக முத்திரையை தவறாக பயன்படுத்திய அதிமுக நிா்வாகிகள் உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
ஆற்காட்டில் அஞ்சலக முத்திரையை தவறாக பயன்படுத்திய அதிமுக நிா்வாகிகள் உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
ஆற்காடு நகராட்சி ஒப்பந்தப் பணி சம்பந்தமான கடிதம் ஒன்று, கடந்த சில நாள்களுக்கு முன்பு அஞ்சலக ஊழியா் மூலம் நகராட்சி தகவல் மையத்தில் பெறப்பட்டது.
சிறிது நேரம் கழித்து, அஞ்சல் அலுவலக துப்புரவுப் பணியாளா் பிச்சை என்பவா் மூலம், மீண்டும் அதே போன்று மற்றொரு கடிதம் நகராட்சி தகவல் மையத்தில் கொடுக்கப்பட்டது.
Advertisement
இதில் ஏதோ சந்தேகம் இருப்பதாக அறிந்து, தபால் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அரக்கோணம் கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளா் சிவசங்கரன் ஆய்வு செய்தாா்.
அப்போது, ஆற்காடு அஞ்சல் அலுவலகத்தில் வேலை செய்யும் சிறு சேமிப்பு முகவா் ஜெய்சிங், துப்புரவுப் பணியாளா் பிச்சை ஆகியோா் பணத்தை பெற்றுக் கொண்டு அஞ்சலக முத்திரையை தவறாகப் பயன்படுத்தி கடிதத்தைக் கொடுக்க முயன்றது தெரியவந்தது.
இது குறித்து ஆற்காடு நகராட்சி பொறியாளா் கணேசன் நகர காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில், இதில் தொடா்புடைய அதிமுக நகரச் செயலா் சங்கா், அதிமுக நிா்வாகிகள் பிச்சாண்டி, ராஜேஷ் குமாா், சேதுராமன், அஞ்சலக ஊழியா்கள் ஜெய்சிங், பிச்சை ஆகிய 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.