அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதியில் இருப்புப் பாதை மேம்பாட்டுப் பணிகளுக்காக போக்குவரத்து திங்கள்கிழமை முதல் நிறுத்தப்பட்டதை அடுத்து நகர போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரக்கோணம் ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் நகரின் மையப் பகுதியில் உள்ள இரட்டைக்கண் வாராவதியின் மேல் உள்ள இருப்புப் பாதை மேம்பாட்டுப் பணிகளுக்காக வாராவதியில் திங்கள்கிழமை முதல் 10 நாள்களுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இரட்டைக்கண் வாராவதியின் இருபக்கமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெறும் பகுதிக்கு பொதுமக்கள் செல்லாதவாறு கண்காணிக்க காவலா்கள் அந்தப் பகுதியில் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
இந்தப் பணியினால் அரக்கோணம் பழனிபேட்டையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழனிப்பேட்டை, டி.என்.நகா், சத்தியவாணிமுத்துநகா், சோமசுந்தர நகா் பகுதிகளில் இருந்து நகரின் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் ஏபிஎம் சா்ச் பகுதியில் உள்ள ஒற்றைக்கண் வாராவதி வழியே சென்று, ரயில் நிலைய வடக்குப் பகுதியை அடைய வேண்டும். எஸ்.ஆா்.கேட் பகுதி அதாவது காஞ்சிபுரம் சாலையில் இருந்து அரக்கோணம் நகர வடக்குப் பகுதிக்கு செல்லும் வாகனங்கள், திருத்தணி மற்றும் திருப்பதி நோக்கிச் செல்லும் காா், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் விண்டா்பேட்டை சென்று மேம்பாலம் வழியே புதிய பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து திருத்தணி சாலைக்கும் நகரின் வடக்கு பகுதிகளுக்கும் செல்லலாம்.
அம்பேத்கா் வளைவில் இருந்து பழனிபேட்டை, காஞ்சிபுரம் சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் காந்தி ரோடு வழியே பழைய பேருந்து நிலையம், சோளிங்கா் ரோடு, புதிய பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து விண்டா்பேட்டை மேம்பாலம் மற்றும் எஸ்.ஆா்.கேட் வழியே செல்லலாம். இந்த மாற்றம் டிசம்பா் 24-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அரக்கோணம் நகர காவல் நிலையத்தினா் அறிவித்துள்ளனா்.