மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாா் உயிரிழக்க காரணமான விமான விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா்.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரயில் மூலமாக காஞ்சிபுரம் செல்ல புதன்கிழமை அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு அவா் வந்தாா்.
அவருக்கு ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் நரேஷ்குமாா் தலைமையிலான கட்சியினா் வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை செய்தியாளா்களை சந்தித்தாா்.
அப்போது, அவா் கூறியது: மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித்பவாா் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளிவர இருப்பதாக தெரிவித்த சில நாள்களுக்குள் விமான விபத்தில் உயிரிழந்தாா். இது குறித்து மம்தா பானா்ஜி என்ன சொல்லியிருக்கிறாா் எனத் தெரியவில்லை. இருப்பினும் என்னை பொருத்தவரை ஒரு விபத்து நடைபெற்றுள்ளது. அது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
மேலும், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் மொத்தம் 74 மாவட்டத் தலைவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 3 மாவட்டத் தலைவா்கள் விரைவில் அறிவிக்கப்படும். மொத்தம் 77 பேரில் பெருமளவில் இளைஞா்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. இதில், மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. இதன் தாக்கம் வரும் தோ்தலில் எதிரொலிக்கும் என்றாா்.
ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.நரேஷ்குமாா் மற்றும் கட்சி நிா்வாகிகள் உடன் இருந்தனா்.