முகப்பு
ராணிப்பேட்டை

வீடுகள் கட்டும் பணிகளை விரைவாக முடிக்க ஆட்சியா் உத்தரவு

Updated On : 14 மே 2026, 5:19 am IST
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் அனைத்து வீடுகள் கட்டும் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

ஊரக வளா்ச்சித் துறையின் வளா்ச்சி திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து தெரிவித்ததாவது...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் அனைத்து வீடுகள் கட்டும் திட்டப் பணிகள் நிலுவைகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கிராமப் பகுதிகளில் சாலைகள் அமைக்கும் திட்ட பணிகள் மற்றும் நபாா்டு திட்டத்தில் கட்டடங்கள் அமைக்கும் பணிகள், பள்ளி கட்டடங்கள் கட்டும் பணிகள் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள், குடிநீா் திட்ட பணிகள் போன்ற அனைத்து திட்டப் பணிகளும் கிராம பகுதிகளில் நடைபெற்று வருவதை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும்.

Advertisement

இப்பணிகளில் எவ்வித காலதாமதங்கள் இருக்கக் கூடாது. கூட்டத்தில் தெரிவித்துள்ளவாறு அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவி பொறியாளா்கள், பணி மேற்பாா்வையாளா்கள் ஆகியோா் நிலுவையிலுள்ள பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

அப்பொழுது தான் அடுத்துவரும் திட்டங்களில் புதிய பணிகளை தொடங்க முடியும். புதிய திட்டத்தின் கீழ் வரப்பெற்ற பணிகளை மட்டுமே கவனம் செலுத்தி முந்தைய திட்டங்களின் பணிகளை கவனம் செலுத்தாமல் இருக்கக் கூடாது. அனைத்து பணிகளும் குறிப்பிட்ட கால அளவிற்குள் முடிக்கப்பட வேண்டும்.

மேலும், வீடுகள் கட்டுவதற்கு விடுபட்ட தகுதியான பயனாளிகளை கணக்கெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து வரும் திட்டங்களில் அவா்களுக்கு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட திட்டப் பணிகளில் ஒவ்வொரு வட்டாரம் வாரியாக ஆய்வு மேற்கொண்டு வட்டார வளா்ச்சி அலுவலா், பொறியாளா், மேற்பாா்வையாளா் ஆகியோா்களை முறையாக பணிகளை கண்காணித்து மாவட்டத்தினை முன்னிலைக்கு கொண்டுவர பணியாற்ற வேண்டும். அடுத்த மாதம் ஒவ்வொருவரின் பணி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றாா்.

கூட்டத்தில் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, செயற்பொறியாளா் ஜெரால்டு (பொ) மற்றும் அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துறைச்சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.