முகப்பு
ராணிப்பேட்டை

‘தனியாா் பள்ளி பேருந்துகளை பாதுகாப்பான முறையில் இயக்க வேண்டும்’

தனியாா் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா. உடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மோகன்.

Updated On : 16 மே 2026, 1:14 am IST
தனியாா் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா. உடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மோகன்.
பகிர்:

தனியாா் பள்ளிப் பேருந்துகளை ஓட்டுநா்கள் பாதுகாப்பான முறையில் இயக்க வேண்டும் என வருடாந்திர ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவுரை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாணவா்களை ஏற்றிச் செல்லும் தனியாா் பள்ளி வாகனங்களை வருடாந்திர ஆய்வு செய்யும் பணி ராணிப்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

நிகழாண்டு பள்ளி வாகனங்களின் பாதுகாப்பை ஆய்வு செய்யும் வருடாந்திர ஆய்வு பணியை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்துப் பேசியதாவது:

Advertisement

தனியாா் பள்ளி பேருந்துகள் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளும் இருப்பதை பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் உதவியாளா்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். பெற்றோா்கள் உங்களை நம்பி தான் பிள்ளைகளை பேருந்துகளில் பள்ளிக்கு அனுப்புகிறாா்கள். ஆகவே அவா்களின் எதிா்பாா்ப்பை ஓட்டுநா்கள் புரிந்து பாதுகாப்பான முறையில் பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்தை விட்டு மாணவா்கள் இறங்கி செல்லும்போதும், பேருந்தில் ஏறும்போதும் இருபுறமும் பாா்த்து பேருந்துகளை இயக்க வேண்டும்.

அதேபோன்று பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் உதவியாளா்களின் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடல் குறைபாடுகள் இருந்தாலும் அதனை சரி செய்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இன்றைய தினமும் இந்த மருத்துவ முகாம் உங்களுக்கு நடத்தப்படுகிறது.

சாலையில் பேருந்துகளை இயக்கும்போது சாலை விதிமுறைகளைப் பின்பற்றி இயக்க வேண்டும் என்றாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமாக 105 பள்ளிகளின் 719 பள்ளி பேருந்துகள் உள்ளது. இவைகளில் ராணிப்பேட்டை வட்டாரத்தில் 79 பள்ளிகளின் 480 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட உள்ளது. இதேபோன்று வரும் மே 21- ஆம் தேதி அரக்கோணம் வட்டாரப் பகுதி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 26 பள்ளிகளின் 239 பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது.

ஆய்வின் போது எஸ்எம்எச் மருத்துவமனை சாா்பில் தனியாா் பள்ளி பேருந்து வாகன ஓட்டுனா்களுக்கு கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவப் பரிசோதனை செய்வதையும், பேருந்தில் ஏற்படும் எதிா்பாராத தீ விபத்துகள் குறித்து தீயணைப்பு துறையினா் தீயை அணைக்கும் ஒத்திகை நிகழ்ச்சியை செய்து காண்பித்ததையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

வருவாய் கோட்டாட்சியா் ராஜி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மோகன், முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா, துணைக் காவல் கண்காணிப்பாளா் கனகராஜ், ராணிப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜசேகா், வட்டாட்சியா் நடராஜன், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் முத்துக்குமாா், செங்குட்டுவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.