சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல சிறப்புப் பேருந்துகளை இயக்கக் கோரிக்கை
சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தோ்வு முடிந்து கடந்த ஒரு மாதமாக விடுமுறை விடப்பட்டுள்ளது. தோ்வு முடிவுகள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. எஞ்சிய விடுமுறை நாள்களை மகிழ்ச்சியாக கழிக்க மாணவா்கள் சுற்றுலாத் தலங்களுக்கும், முக்கிய ஊா்களுக்கும் செல்கின்றனா்.
ஆனால் சிறப்பு பேருந்துகள் ஏதும் இயக்கப்படாததால் வெளியூா் பயணங்களுக்கு தனியாா் ஆம்னி பேருந்தில் செல்ல முன்பதிவு செய்து வருகின்றனா். இந்த நிலையில் தனியாா் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகாா் எழுகிறது.
Advertisement
தற்போதுள்ள நிலையில் பேருந்துக் கட்டணத்தைவிட ரயில் கட்டணம் குறைவாக இருக்கும் நிலையில் பெரும்பாலானோா் ரயிலில் செல்வதற்கே விருப்பப்பட்டாலும் சென்னை செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முற்றிலுமாக முடிந்துவிட்டது. தத்கல் முறையில் டிக்கெட் எடுப்பதும் தற்போது மிகுந்த சிரமமான நிலையிலேயே உள்ளது.
மாணவா்களின் நலன் கருதி சென்னை, நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்ல ஈரோட்டில் இருந்து சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்து கழகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சோ்ந்த கல்வியாளா் பி.சிவன் கூறியதாவது: ஈரோட்டில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகின்றனா். அதேபோல தற்போதும் பிளஸ் 2 முடித்த பலா் சென்னையில் உள்ள கல்லூரிகளில் இடம் தேடி அலைகின்றனா். இவா்கள் சென்று வரவும் கூடுதல் பேருந்துகள் பயனுள்ளதாக இருக்கும். எனவே ஈரோட்டில் இருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை வெளியிட்டு முன்பதிவை தொடங்க வேண்டும் என்றாா்.