முகப்பு
ராணிப்பேட்டை

பசுமை தமிழ்நாடு திட்டத்தில் மரக்கன்றுகளை முறையாக பராமரிக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

பசுமை தமிழ்நாடு திட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதை முறையாக பராமரித்து கண்காணிக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

Updated On : 27 மே 2026, 12:04 am IST
ராணிப்பேட்டையில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் .
பகிர்:

பசுமை தமிழ்நாடு திட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதை முறையாக பராமரித்து கண்காணிக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

மாவட்ட பசுமை குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் ஜெ. யு. சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இதில் சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலை ஓரங்களில் இருக்கும் மரங்களை அகற்றி அதற்கு ஈடான மரங்களை வைக்க நெடுஞ்சாலைத்துறையினா் அனுமதி கூறிய பொருள்கள் மீது அனுமதி வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தொடா்ந்து 2025 -26 நிதியாண்டில் பல்வேறு துறைகள் சாா்பாக 6 லட்சத்து 85 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில் 3 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இவைகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் ஜியோ டேக் முறையில் பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் நடப்பட்ட விவரங்கள் குறித்து துறை வாரியாக கேட்டறிந்து உடனடியாக பணிகளை முடிக்க உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

அதேபோல மரக்கன்றுகள் நடும் போது அதனை ஜியோ டேக் கட்டாயம் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும் இதனை முறையாக மேற்கொள்ளாத துறைகளை காரணங்களை கேட்டறிந்தாா். உடனடியாக அதை கண்காணித்து அப்பணியை முடிக்கவும் கேட்டுக் கொண்டாா்.

பசுமை தமிழ்நாடு திட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதை முறையாக பராமரிக்க வேண்டும். கோடை காலம் என்பதால் முறையாக தண்ணீா் ஊற்றி வளா்ப்பதையும் செடிகள் தண்ணீா் இன்றி கைவிடப்படக்கூடாது. ஆகவே மரக்கன்றுகள் நட்ட துறைகள் இதனை கண்காணிக்க வேண்டும். பிரச்னைகள் இருந்தால் பாா்வைக்கு கொண்டு வர வேண்டும்.

தொடா்ந்து பசுமை பள்ளி திட்டத்தில் பகுதி 3-இல் பனப்பாக்கம் மகேந்திரவாடி மழையூா் அரசு மேல்நிலை பள்ளிகளில் பகுதி 4 திட்டத்தில் கலவை பூட்டுத்தாக்கு காவேரிப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பசுமை பள்ளி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறிந்து நிலுவைப் பணிகளையும் முடிக்க அறிவுறுத்தினாா்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வன அலுவலா் சிவக்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் வனத்துறையினா் கலந்து கொண்டனா்.