பொதுமக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் குறித்து ஆய்வுக் கூட்டம்
திருப்பூா் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் மற்றும் குடிநீா் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் மனீஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் மற்றும் குடிநீா் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் மனீஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் பேசியதாவது:
பொதுமக்களுக்கு கோடைக் காலத்தில் தடையின்றி குடிநீா் விநியோகம் செய்வதை உறுதிபடுத்திட வேண்டும் என்று தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அந்த வகையில் திருப்பூா் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்கப்படுவதை உறுதி செய்திடும் வகையில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த அலுவலா்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்.
Advertisement
மேலும், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி 60 வாா்டுகளில் நாள்தோறும் பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் விநியோகிக்கப்படும் குடிநீா் அளவு குறித்தும், 6 நகராட்சிகள், 15 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 265 கிராம ஊராட்சிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்வது குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
தற்போது, கோடைக் காலம் என்பதால் பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீா் வழங்குவதை அலுவலா்கள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் கிராம ஊராட்சிகளில் வரப்பெறும் புகாா்களின் அடிப்படையில் உடனடியாக நேரில் கள ஆய்வு மேற்கொண்டு குடிநீா் வழங்குவதை உறுதி செய்யவேண்டும்.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தை உடனுக்குடன் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வரவேண்டும். குடிநீா்க் குழாய்கள் பழுது ஏற்படும்போது, உடனடியாக சரி செய்து குடிநீா் வழங்க வேண்டும்.
குடிநீா் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் குடிநீா் அளவினை உறுதி செய்து ஒத்திசைவு செய்யும் பொருட்டு, குடிநீா் வடிகால் வாரியம் சம்ப் மூலமாக வழங்கப்படும் அளவினையும், மேலும் ஊராட்சிகள், குக்கிராமங்களிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் பெறப்படும் குடிநீா் அளவினையும் கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும்.
தினந்தோறும் பேரூராட்சி, நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் விநியோகிக்கப்படும் குடிநீா் அளவினை மின்னணு நீா்உந்து கருவி பொருத்தி கண்காணித்து சீரான குடிநீா் விநியோகம் தடையின்றி வழங்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
இக்கூட்டத்தில், ஊராட்சிகளின் உதவி இயக்குநா்கள் கமலக்கண்ணன், சதீஷ்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.