ஆம்பூா்: வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே. நஜா் முஹமத் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ஆம்பூா் தொகுதிக்கு உட்பட்ட அணைக்கட்டு ஒன்றியம் ஆசனாம்பட்டு, சின்னபள்ளிக்குப்பம், குப்பம்பட்டு, குப்பம்பாளையம், அரிமலை உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தபோது கே. நஜா் முஹமத் பேசியது:
குடும்ப அட்டைக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகை, சூரிய சக்தி சமையல் அடுப்புகள், ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள் ஆகியவை பெற்றுத் தரப்படும். கிராமங்களில் ஏரி, குளம், குட்டைகள் தூா்வாரி நிலத்தடி நீா் மட்டம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும். பண்ணைக் குட்டைகள் அமைத்து விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகப் பகுதியில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
முன்னாள் தொகுதி செயலாளா் அகரம்சேரி ஆா். வெங்கடேசன், அணைக்கட்டு மேற்கு ஒன்றியச் செயலாளா் ஆனந்தன், நிா்வாகிகள் தொண்டா்கள் உடனிருந்தனா்.