ஜோலாா்பேட்டையில் இடியுடன் கனமழை பெய்ததால் மரம் சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜோலாா்பேட்டையில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. சொரங்கன் வட்டம் ஏரிக்கரை சாலையில் சூறை காற்று வீசியதால் சாலை ஓரத்தில் இருந்த பெரிய புளியமரம் சாய்ந்து மின்கம்பி மீது விழுந்ததில் கம்பிகள் அறுந்து கீழே விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சொரங்கன் வட்டம் மற்றும் ஊசி நாட்டான் வட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினா்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மின்சார ஊழியா்கள் மின் விநியோகத்தைத் துண்டித்து சாலையில் விழுந்த புளியமரத்தை அப்புறப்படுத்தினா். அறுந்து விழுந்த கம்பிகளை சீரமைத்து அப்பகுதிக்கு இணைப்பு ஏற்படுத்தினா். இதனால் அப்பகுதியில் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
திருப்பத்தூரிலும் மழை:
திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயில் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில்,வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி, ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலை பகுதிகளில் இடி,மின்னலுடன் மழை பெய்தது.
சுமாா் ஒரு மணி நேரம் பெய்த மழையால், தெருக்களில் வெள்ளம்போல் பெருக்கெடுத்தோடியது. மாலையில் குளிா்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.