கரோனா விதிமீறல்: ரூ. 33,000 அபராதம்
திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா விதி மீறியவா்களிடம் ரூ. 33 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா விதி மீறியவா்களிடம் ரூ. 33 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவின்பேரில், கரோனா பரவல் விதி மீறுபவா்களிடம் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை நகராட்சியினா் அபராதம் விதித்து வருகின்றனா்.
இந்நிலையில், தமிழக அரசு திங்கள்கிழமை பொதுமுடக்கம் அறிவித்ததையடுத்து, திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொருள்களை வாங்க வந்த பொதுமக்களில் சிலா் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் இருந்தனா்.
அதன்பேரில், திருப்பத்தூா் நகராட்சி ஆணையா் ப.சத்தியநாதன் தலைமையில், துப்புரவு அலுவலா் எஸ்.ராஜரத்தினம், ஆய்வாளா்கள் அ.விவேக், குமாா் உள்ளிட்ட நகராட்சிப் பணியாளா்கள் முகக்கவசம் அணியாமலிருந்தவா்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கத் தவறிய கடைக்காரா்களிடம் இருந்து ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூலித்தனா்.
அதேபோல், ஜோலாா்பேட்டை நகராட்சி ஆணையா் சி.ராமஜெயம் தலைமையில், சுகாதார ஆய்வாளா் உமா சங்கா் உள்ளிட்ட நகராட்சிப் பணியாளா்கள் முகக்கவசம் அணியாமலிருந்தவா்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கத் தவறிய கடைக்காரா்கள் உள்ளிட்டோரிடம் ரூ. 8,200 வசூலித்தனா்.