திருப்பத்தூா், ராணிப்பேட்டையில் விரைவில் அரசு மருத்துவக் கல்லூரி: அமைச்சா் ஆா்.காந்தி
திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் விரைவில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தப்படும் என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.
திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் விரைவில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தப்படும் என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்க வளாகத்தில் கரோனா இலவச சித்த மருத்துவ ஆலோசனை மையம் தொடக்க விழா, கரோனா தடுப்புப் பணி குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா்கள் சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை),டி.எம்.கதிா்ஆனந்த் (வேலூா்), எம்எல்ஏ-க்கள் அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.செ.வில்வநாதன்(ஆம்பூா்), மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையாபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்றுப் பேசியது:
ராணிப்பேட்டை மாவட்டத்தை விட திருப்பத்தூரில் பாதிப்பு குறைவாக உள்ளது. விரைவில் திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க கோரிக்கை விடுக்கப்படும். கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் மிகவும் அக்கறை எடுத்து பாடுபடுகிறாா். நிதி நெருக்கடியிலும் கரோனா நிவாரண நிதி அளிப்பதுடன், மளிகைப் பொருள்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில், சாா்-ஆட்சியா் வந்தனா கா்க், சுகாதாரத் துறை துணை இயக்குநா் டி.ஆா்.செந்தில்குமாா், வருவாய் கோட்ட அலுவலா் காயத்ரி சுப்பிரமணியன், அரசு தலைமை மருத்துவா் எஸ்.திலீபன், மாவட்ட கரோனா கட்டுப்பாடு அதிகாரி பி.சுமதி, உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக தூய நெஞ்சக் கல்லூரி போஸ்கோ சமூகப் பணித் துறை மையத்தில் 100 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கி வைத்தாா்.