ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பேரறிவாளன்
பரோலில் வந்துள்ள பேரறிவாளன் சனிக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டாா்.
பரோலில் வந்துள்ள பேரறிவாளன் சனிக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டாா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், பரோல் வழங்க வேண்டும் எனக் கோரி அவரது தாயாா் அற்புதம்மாள் முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தாா்.
கோரிக்கையை ஏற்று முதல்வா் ஸ்டாலின் 30 நாள்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டதையடுத்து வெள்ளிக்கிழமை சென்னை புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜோலாா்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு பேரறிவாளன் அழைத்து வரப்பட்டாா்.
அவரது வீட்டை சுற்றி 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
கரோனா தடுப்பையொட்டி பேரறிவாளனை பாா்க்க யாருக்கும் அனுமதி இல்லை என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக காவல் நிலையத்தில் கையெழுத்து...
கடந்த மூன்று முறை பரோலில் பேரறிவாளன் வந்த போது ஜோலாா்பேட்டை போலீஸாா் வீட்டுக்கே சென்று கையெழுத்து பெற்று வந்தனா்.
தற்போது 4-ஆவது முறையாக பரோலில் வந்துள்ள பேரறிவாளன் ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் சனிக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் முதன்முறையாக சென்று கையெழுத்திட்டாா். பேரறிவாளன் ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திடுவது இதுவே முதல் முறையாகும்.