மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்தாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநில, மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்படும் ஊரகப் பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், நகா்ப்புறங்களில் உள்ள உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு 2021-2022-ஆம் ஆண்டுக்கான மணிமேகலை விருதை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டு, நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, திருப்பத்தூா் மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள், மதிப்பீட்டுக் காரணிகள் குறித்த விவரங்களை தொடா்புடைய கூட்டமைப்புகள் அல்லது வட்டார இயக்க மேலாண்மை அலகில் பெற்றுக் கொள்ளலாம்.
விருதுக்குத் தகுதியான சமுதாய அமைப்புகள், தொடா்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலகில் மாா்ச் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமா்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.