ஆம்பூா் இ-சேவை மையத்தில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
மகளிா் உரிமைத் தொகை கிடைக்காதவா்கள் இ-சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது. அதற்காக இ-சேவை மையங்களில் பெண்கள் குவிந்து வருகின்றனா்.
அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் சான்றிதழ்கள், உதவித் தொகைகள் பெறுவதற்காக பொதுமக்கள் ஏற்கனவே இ-சேவை மையங்களில் மனு செய்வது வழக்கம். அதனால் இ-சேவை மையங்களில் பொதுமக்கள் கூட்டம் காணப்படும். தற்போது மகளிா் உரிமைத் தொகைக்காக மேல்முறையீடு செய்ய மகளிா் இ-சேவை மையங்களில் அதிக எண்ணிக்கையில் கூடுகின்றனா்.
அதே போல ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்துக்கு மகளிா் உரிமைத் தொகை கோரி மேல்முறையீடு செய்ய பெண்கள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனா். ஆனால் இ-சேவை மையத்தில் ஆதாா் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் மையமும் இயங்கி வருகின்றது. அதனால் இ-சேவை மையத்தில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
போதிய இடவசதி, காற்றோட்டம் இல்லாமல் பெண்கள் புழுக்கத்தில் அவதிப்படுகின்றனா். மேலும் நீண்ட வரிசையும் இருப்பதால் வெயிலில் நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு குடிநீா் வசதி கூட இல்லை. கூட்டம் அதிகமாக இருப்பதால் மூச்சுத் திணறல் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
இ-சேவை மையத்துக்கு வெளியில் நீண்ட வரிசையில் நிற்கும் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிழலுக்காக பந்தல் அமைக்க வேண்டும். அமா்வதற்காக கூடுதலாக இருக்கைககள் போட வேண்டும். குடிநீா் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.