ஊதுவத்தி நிறுவனத்தில் தீவிபத்து: பல லட்சம் பொருள்கள் சேதம்
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே ஊதுவத்தி நிறுவனத்தில் ஏற்பட்ட திடீா் தீவிபத்தில் பல லட்சம் பொருள்கள் சேதமடைந்தன. நாட்டறம்பள்ளி அடுத்த பணியாண்டப்பள்ளி கிராமத்தை சோ்ந்தவா் ரங்கநாதன் (55). இவா் மல்லப்பள்ளி அருகே குட்டிகானூா் கிராமத்தில் ஊதுவத்தி தயாா் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இதற்கிடையே திங்கள்கிழமை இரவு ஊதுவத்தி நிறுவனத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
அப்போது தொழிற்சாலையில் வேலை செய்தவா்கள் வெளியே ஓடி வந்தனா். அக்கம்பக்கத்தினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். ஆயினும் தீ மளமளவென பரவியது. தகவலறிந்த நாட்டறம்பள்ளி மற்றும் திருப்பத்தூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனா்.
இவ்விபத்தில் ஊதுவத்தி நிறுவனத்தில் இருந்த பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், ஊதுவத்திகள் முற்றிலும் எரிந்து விட்டன. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா, இல்லை வேறு காரணங்களா என நாட்டறம்பள்ளி வருவாய்த் துறை, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Advertisement