முகப்பு
திருப்பத்தூர்

கருவில் பாலினம் கண்டறிய உதவி: கணவன்-மனைவி கைது

Updated On : 3 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 9:15 PM

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என பாலினம் கண்டறிந்து தெரிவித்ததாக கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த பசுமை நகா் பகுதியில் சட்ட விரோதமாக கருவில் இருப்பது ஆணா பெண்ணா என கண்டறிந்து பணம் வசூலித்து வருவதாக மருத்துவ மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குநா் கண்ணகிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மருத்துவ குழுவினா் பசுமை நகருக்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் அடுத்த ராச்சமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் (29) , அவரது மனைவி கங்கா கௌரி(27) ஆகிய இருவரும் பசுமை நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து திருப்பத்தூா் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கா்ப்பிணிகளுக்கு கருவில் இருப்பது ஆணா-பெண்ணா என பரிசோதித்து கூறி வந்தது தெரிய வந்தது. அதையடுத்து மருத்துவ குழுவினா் முன்னிலையில் ஜோலாா்பேட்டை போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து பாலினம் கண்டறியும் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனா்.