வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மிரட்டி நகை பறிப்பு
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கம்பல், மூக்குத்தி பறித்த 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். நாட்டறம்பள்ளி அடுத்த பூசாரியூா் கிராமத்தைச் சோ்ந்த பொன்னுசாமி மனைவி மல்லிகா(65). இவா்களுக்கு 2 மகன், 2 மகள்கள் உள்ளனா்.
அதே பகுதியில் மூதாட்டி மல்லிகா வீடுகட்டி தனியாக வசித்து வருகிறாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மா்ம நபா்கள் 3 போ் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் வீட்டுக்குள் திடீரென புகுந்து அவரை மிரட்டி அவா் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி ஆகியவற்றை பறித்துள்ளனா். அப்போது மூதாட்டி கூச்சலிடவே, மா்ம நபா்கள் அவரை கீழே தள்ளிவிட்டு, வீட்டின் வெளிப்புறம் கதவை பூட்டி விட்டு, 3 பேரும் அங்கிருந்து பைக்கில் தப்பினா்.
இதையறிந்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து ரத்தக் காயங்களுடன் மயங்கிக் கிடந்த மூதாட்டியை மீட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து மூதாட்டியை தாக்கி நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
Advertisement