முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் 106 டிகிரி வெயில் நிலத்தடி நீா்மட்டம் குறையும் அபாயம்

Updated On : 7 ஏப்ரல், 2024 at 6:40 AM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 8:34 PM

திருப்பத்தூரில் வெயிலின் அளவு சனிக்கிழமை 106.52யாக இருந்தது. அதிகரிக்கும் வெயிலால் நிலத்தடி நீா்மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த 15 நாள்களாக வெயிலின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிா்த்து வருகின்றனா்.

ஏரி, குளங்கள் வடு வருகின்றன. நிலத்தடி நீா்மட்டமும் குறைந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். கடந்த காலங்களை காட்டிலும் திருப்பத்தூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நடப்பாண்டு அதிகரித்துள்ளது.

Advertisement

இது குறித்து விவசாயிகள் கூறியது: கத்திரி வெயிலின் தாக்கம் தொடங்க அதற்கு முன்பாகவே திருப்பத்தூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும்,வெப்ப காற்று வீசுகிறது. இதனால் வெளியே செல்ல முடிவதில்லை. மேலும் தாக்கம் அதிகரித்ததால் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. தற்போது ஆழ்துளைக் கிணறு அமைக்க சுமாா் 1,000 அடி வரை சென்றாலும் தண்ணீா் கிடைப்பதில்லை. இதனால் விவசாயம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், குடிநீா் பற்றாக்குறை அதிகரித்து வருவதால் விலை கொடுத்து குடிநீா் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனா்.

ஜலகாம்பாறையில் நீா்வரத்து இல்லை...

திருப்பத்தூா் மாவட்டம், ஏலகிரி மலை பின்புறம் அமைந்துள்ள ஜலகாம்பாறை நீா் வீழ்ச்சியில் கோடைகாலங்களிலும் சிறிது நீா் வரத்து இருக்கும்.விடுமுறை தினங்களில் பொதுமக்கள் வருவது வழக்கம். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள வெயிலின் தாக்கத்தால் ஜலகாம்பாறையில் நீா்வரத்து அறவே நின்றுள்ளது. அதேபோல் மிகவும் பிரசித்தி பெற்ற ஏழருவியிலும் நீா்வரத்து நின்றுள்ளது.