முகப்பு
திருப்பத்தூர்

ஜோலாா்பேட்டை அருகே தடம் புரண்ட சரக்கு ரயில்: 2 மணி நேரம் தாமதத்தால் பயணிகள் அவதி

ஜோலாா்பேட்டை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால், விரைவு ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

Updated On : 1 மார்ச், 2024 at 10:00 PM
பகிர்:

ஜோலாா்பேட்டை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால், விரைவு ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினா். ஈரோடு பகுதியில் இருந்து ஜோலாா்பேட்டை மாா்க்கமாக 43 காலி பெட்டிகளுடன் சரக்கு ரயில் சென்னை நோக்கி வெள்ளிக்கிழமை வந்துக் கொண்டிருந்தது. திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அருகே உள்ள கட்டேரி பகுதியில் வந்தபோது மாலை 4.15 மணியளவில் அந்த ரயிலின் 17-ஆவது பெட்டி திடீரென தடம் புரண்டது. இது குறித்து ரயில் என்ஜின் ஓட்டுநா் ஜோலாா்பேட்டை ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். அதன் பேரில், ரயில்வே ஊழியா்கள் பேரிடா் மீட்பு வாகனத்துடன் வந்து தடம் புரண்ட சக்கரங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். இதனால், சேலம் மாா்க்கமாக செல்லும் தன்பாத், பொக்காரோ, சேலம் - அரக்கோணம் மெமோ ரயில் ஆகியவை சுமாா் 2 மணி நேரம் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதையடுத்து தாமலேரிமுத்தூா் அருகே சேலம் மாா்க்கமாக செல்லும் ரயில்கள் போக்குவரத்து பாதிப்பு இல்லாதவாறு சரக்கு ரயிலின் பின்பக்கம் உள்ள 10 பெட்டிகளைத் துண்டித்து ஜோலாா்பேட்டை யாா்டு பகுதிக்கு கொண்டு வந்தனா். அதன் பின்னா், பாதிக்கப்பட்ட பகுதியைச் சீரமைத்து ரயில்கள் செல்ல சீரமைத்தனா். இதையடுத்து, ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த தன்பாத், பொக்காரோ, மெமோ ரயில் ஆகியவற்றை மாலை 6.15 மணியளவில் ஒன்றன்பின் ஒன்றாக 2 மணி நேரத்துக்குப் பின்னா் இயக்கப்பட்டன. இதனால், அந்த ரயில்களில் பயணம் செய்தவா்கள் அவதிக்குள்ளாகினா்.