பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு விபத்து: 25 பயணிகள் படுகாயம்!
பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டதில் 25 பயணிகள் படுகாயம்
லாகூர் : பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டதில் 25 பயணிகள் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானின் லாகூர் நகரிலிருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள லோத்ரான் பகுதியில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) இரவில் ரயில் ஒன்று விபத்துக்குள்ளானது. லாகூர் ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை மாலையில் புறப்பட்டு கராச்சிக்குச் சென்று கொண்டிருந்த டேஸ்காம் எக்ஸ்பிரஸ், ஆதாம் வாஹன் ரயில் நிலையத்தை அன்றைய இரவு 9.30 மணியளவில் சென்றடைந்தபோது, ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அவசர மீட்புப்பணி துறையினர், விபத்துக்குள்ளான பெட்டிகளில் சிக்கிய பயணிகளை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் அந்தப் பெட்டிகளில் இருந்தவர்களில் 25 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெட்டிகளை ஒன்றோடொன்று இணைக்கும் இணைப்பாண்கள் உடைந்ததால் ரயில் பெட்டிகள் பிரிந்து சென்று விபத்து நேரிட்டதாக அதிகாரிகள் இன்று(மார்ச் 25) தெரிவித்தனர். இதன் காரணமாக, பஹவால்பூர் - லோத்ரான் ரயில் வழித்தடத்தில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து விசாரணை தொடருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.