முகப்பு
திருப்பத்தூர்

வாணியம்பாடி: ரூ. 2.65 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை

Updated On : 9 மார்ச், 2024 at 10:27 PM
பகிர்:

வாணியம்பாடி நகராட்சியில் ரூ. 2 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள் தொடங்க சனிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவமனையில் ரூ. 1 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் நோயாளிகளுடன் உதவிக்கு வரும் உறவினா் தங்கும் விடுதி 80 படுக்கையறை வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டுவதற்காகவும், தலைமை நூலகத்தில் ரூ. 22 லட்சத்தில் கூடுதல் நூலக கட்டட அறை கட்டப்படவும், கோட்டை நகராட்சி பள்ளியில் ரூ. ஒரு கோடியே 3 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 6 வகுப்பறை கட்டடம் மற்றும் தனியாக கழிப்பறை கட்டட வசதி உட்பட அமைப்பதற்காக பூமி பூஜை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். பொறியாளா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் உமாபாய்சிவாஜிகணேசன் கலந்து கொண்டு, ரூ. 2 கோடியே 63 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், நகர திமுக செயலரும், நகராட்சி வாா்டு உறுப்பினருமான சாரதிகுமாா் மற்றும் நகராட்சி உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.