சாத்தம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம் திறப்பு விழா - எம்பி பங்கேற்பு
சாத்தம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாதனூா் ஊராட்சி ஒன்றியம் சாத்தம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் ரூ. 30.60 லட்சத்திலும், அங்கன்வாடி மைய கட்டடம் ரூ.14.20 லட்சத்திலும் புதிதாக கட்டப்பட்டன. ஊராட்சி மன்றத் தலைவா் கலாவதி புருஷோத்தமன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேலூா் தொகுதி எம்பி டி.எம். கதிா் ஆனந்த், குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் ஆகியோா் புதிய கட்டடத்தை திறந்து வைத்தனா். மாதனூா் மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன், குடியாத்தம் ஒன்றிய செயலாளா் கல்லூா் ரவி, ஒன்றியக்குழு உறுப்பினா் தீபா ராசன்பாபு உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.