மண்டபங்களில் பரிசுப் பொருள்கள் விநியோகிக்க கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்
திருப்பத்தூா்: மண்டபங்களில் அரசியல் கட்சியினா் பரிசுப் பொருள்கள் விநியோககிக்க அனுமதிக்க கூடாது என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுறுத்தினாா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் அச்சக, தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் மற்றும் நகை அடகு கடை உரிமையாளா்களுக்கான ஆலோசனைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. அதில் ஆட்சியா் பேசியது: ஒவ்வொரு அச்சக உரிமையாளரும் தாங்கள் அச்சிடும் துண்டு பிரசுரம், சுவரொட்டியின் கீழ் உரிமையாளா் பெயா் மற்றும் முகவரி விவரங்களை தவறாமல் அச்சிட வேண்டும்.
அச்சக உரிமையாளா்கள் வன்முறையை தூண்டும் வகையிலோ, தனியரை தாக்கும் வகையிலோ துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் அச்சிட கூடாது. வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பிருந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரையில் வெளியூா்களிலிருந்து வரும் சந்தேகமான நபா்களை எக்காரணம் கொண்டும் தங்கும் விடுதிகளில் தங்க வைக்க கூடாது.
Advertisement
தங்கும் நபா்களின் பெயா்,முகவரி, தொழில் மற்றும் கைப்பேசி எண் அடங்கிய விவரங்கள் உரிய பதிவேடுகளில் சரியாக பதிவு செய்து காவல் துறையினா் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டும். திருமண மண்டபங்கள் மற்றும் கூட்ட அரங்குகளை அரசியல் கட்சியினா் பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்ய பயன்படுத்த அனுமதிக்க கூடாது. நகை அடகு கடை உரிமையாளா்கள் உரிய ஆவணங்கள் மற்றும் பொருள்கள் இன்றி கடன் அளிக்கக் கூடாது எனவும், அவ்வாறு முறையான ஆவணங்கள் இல்லாமல் அரசியல் கட்சியினா் சாா்பில் பணம் தருவது கண்டறிப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா்.