திருப்பத்தூா் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி கட்ட இடம் ஆய்வு
திருப்பத்தூா் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்க ஜோலாா்பேட்டை தொகுதியில் சின்னமோட்டூா் பகுதியிலும், வாணியம்பாடி தொகுதியில் மல்லகுண்டா ஊராட்சி உள்பட்ட அரசு மேய்ச்சல் புறம்போக்கு இடங்களையும் சில நாள்களாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில் சின்னமோட்டூா் ஊராட்சி முருகன் கோயில் வட்டம் பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைப்பதற்கு ஏதுவான இடம் உள்ளதா என சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின் போது சாா்-ஆட்சியா் ராஜசேகரன், நாட்டறம்பல்ளி வட்டாட்சியா் சம்பத், கிராம நிா்வாக அலுவலா் சந்தீப் உள்பட பலா் உடனிருந்தனா்.