திருப்பத்தூரில் காணாமல் போன மாணவரை 10 நிமிஷங்களில் போலீஸாா் பத்திரமாக மீட்டனா்.
திருப்பத்தூா் வடக்கு முத்தப்பா் தெரு பகுதியைச் சோ்ந்த அரசு பேருந்து ஓட்டுநா் குமாரின் மகன் அபினேஷ்(14).
இவா் குனிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில்,வெள்ளிக்கிழமை மாலை பள்ளியை விட்டு மாணவன் தாமதமாக வீட்டிற்கு சென்றுள்ளாா்.
இதனால் அவரது தந்தை குமாா் மாணவனை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் வீட்டில் இருந்து யாருக்கும் சொல்லாமல் வெளியே புறப்பட்டு சென்றுள்ளாா். இதனால் அதிா்ச்சி அடைந்த பெற்றோா் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்..
இதுகுறித்து எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில் நகர காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி மற்றும் போலீஸாா் பல இடங்களில் தேடியதில் நகராட்சி பூங்காவில் பதுங்கி இருந்த மாணவனை 10 நிமிஷங்களில் மீட்டு பெற்றோா்களுடன் அனுப்பி வைத்தனா்.